[HOME.gif][TAMIL+KARAOKE.gif][KARAOKE+VIDEO.gif][TAMIL+REMIX.gif][TAMIL+LYRICS+1.gif][TAMIL+POP.gif][MP3+SONGS.gif]

Live Cricket

Tuesday, January 19, 2010

Read more...

Vettaikaran

Friday, January 1, 2010



*************************************************************************************

“நேர்மையான பொலிஸ் அதிகாரியாக வர விரும்பும் மாணவன், கால ஓட்டத்தில் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் அழிக்கும் வேட்டைக்காரன் ஆவதே” அறிமுக இயக்குனர் பாபு சிவன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியிருக்கும் ‘வேட்டைக்காரன்’ படத்தின் கதைச் சுருக்கம்.

ஏ.வி.எம் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்தப்படத்தில் அனுஷ்கா, சலீம் கோஸ், ஷியாகி ஷின்டே, சிறிநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை கோபிநாத் கையாண்டுள்ளார். கலை இயக்கத்தை மிலனும், படத்தொகுப்பை வி.ரி.விஜயனும் செய்துள்ளனர்.

தூத்துக்குடியில் நண்பர்களுடன் சுற்றிக்கொண்டும், சமூகத்தில் நடக்கிற தவறுகளை தட்டிக்கேட்டும் வருகிற ரவிக்கு (விஜய்) நேர்மையான பொலிஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று ஆசை. அந்த ஆசைக்கு தூண்டுகோலாய் இருந்தவர் பொலிஸ் அதிகாரி தேவராஜ்.

தூத்துக்குடியிலிருந்து கல்லூரி கல்விக்காக சென்னை வரும் ரவி, வரும் வழியில் சுசிலாவைச் (அனுஷ்கா) சந்திக்கிறார். அதன் பின்னர் ரவிக்கும், சுசிலாவுக்கும் காதல் வரவேண்டும் என்பது இந்தியச் சினிமாவின் எழுதப்படாத விதி. அதுவே வேட்டைக்காரனிலும் தொடர்கிறது.

கல்லூரியில் சேர்ந்து படித்துக்கொண்டு, தன்னுடைய வருமானத்திற்காக ஆட்டோவும் ஓட்டுகிறார் ரவி. இவ்வாறாக கதையின் நீட்சி வில்லன் குழுவின் செல்லாவை சந்திக்க வைக்கிறது. பின்னரான கதை ஓட்டத்தில் ரவி பொலிஸ் ஆனாரா? வில்லன்கள் எவ்வாறு பழிவாங்கப்பட்டார்கள்? ரவி, சுசிலாவை கைப்பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

எத்தனை படத்தில் இதே கதை சொல்லியாகிவிட்டது என்ற உங்களின் ஏக்கம் புரிகிறது. என்ன செய்ய நாங்கள் பார்ப்பது இந்தியச் சினிமா. பருத்திவீரன், பா, சக்தே இந்தியா, மொழி போன்ற வித்தியாச கதைக்களங்களைக் கொண்ட படங்கள் எப்போதாவது ஒருமுறைதான் வரும். நாங்களும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கல்லூரி மாணவராக வரும் விஜய் படம் முழுவதிலும் வில்லன்களைப் பந்தாடுகிறார். அனுஷ்காவுடன் நடனமாடுகிறார். ஆங்காங்கே தன்னுடைய அரசியல் ஆசையை வசனங்களின் மூலம் வெளிக்காட்டுகிறார். என்ன வயது ஆனாலும், பதின்ம வயதை தாண்டிய தோற்றத்திலேயே இருக்கிறார். மற்றப்படி விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.

‘இரண்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அனுஷ்கா சிறிய இடைவெளிக்கு பின்னர் வேட்டைக்காரனில் மீள் அறிமுகமாகியிருக்கிறார். இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் வழமைக்கு மாறாக சற்று உயரமான கதாநாயகி.

‘தேவநாயகம்’ என்கிற பெயரில் தொழில் அதிபர், தாதா இன்னும் பிற.....வாக வரும் சலீம் கோஸ் நல்ல பொருத்தம். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ் திரையுலகில் அவரை காண முடிகிறது. ஷியாகி ஷின்டே, சிறிநாத், சத்யன், டெல்லி கணேஸ் என்று படத்தில் அனேக நடிகர்கள். இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார்கள்.

வேட்டைக்காரனின் பலங்களில் ஒளிப்பதிவையும், கலை இயக்கத்தையும் குறிப்பிட்டு சொல்லலாம். பாடல் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் ஒளிப்பதிவின் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார் கோபிநாத். ‘பில்லா’ படத்தில் கலை இயக்கத்தில் ஆடம்பரம் காட்டிய மிலன் இந்தப் படத்திலும் தன்னை நிரூபிக்க முயன்றுள்ளார்.

சண்டைக்காட்சிகள் குருவி, ஆதவன் என்று ஏற்கனவே எம்மை எரிச்சலூட்சிய யதார்த்த மீறல்கள் கொண்ட காட்சிகளின் தொடர்ச்சியே வேட்டைக்காரனிலும். படத்தின் பலமுமு;, பலவீனமும் விஜய் ஆண்டனி. பாடல்களில் சில ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதால் இரசிகர்களை திரையரங்குக்கு அழைத்துவர உதவும். ஆனால், பின்னணி இசை சொல்லும்படியில்லை.

இயக்குனர் தரணி படங்களில் இணை இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய பாபு சிவனை இரசிகர்கள் வெற்றி இயக்குனராக்குவது கேள்விக்குறியே. வேட்டைக்காரனின் கதை, திரைக்கதை ஏற்கனவே பழக்கப்பட்டது. வசனங்களில் வசனகர்த்தா பாபு சிவனை காண முடிகிறது.

குருவி, வில்லு என்று தொடர்ச்சியான சரிவுகளில் இருக்கும் விஜய்க்கு ‘வேட்டைக்காரன்’ அதே வலியை தரமாட்டான் என்று நம்பலாம். அதற்கு சன் பிக்ஸர்சின் விளம்பர உத்தி உதவக்கூடும். ஆனாலும், தமிழ் சினிமாவின் வசூல் ராஜாவாக வலம் வந்த விஜய்க்கு வேட்டைக்காரனும் பெரிதாக கைகொடுக்கவில்லை.

Read more...

Naan Avan Illai 2



நான் அவன் இல்லை 2

“பிரிக்கப்பட்ட தாயையும், மகளையும் ஒன்றிணைப்பதற்காக வெளிநாட்டில் அதீத ஆசை மற்றும் ஆடம்பரங்களுடன் வாழும் நான்கு பெண்களை ஏமாற்றுகிறான், அண்ணாமலை” இதுவே ‘நான் அவன் இல்லை 2’ கதைச் சுருக்கம். கே.பாலசந்தரின் ‘நான் அவன் இல்லை’யை நடிகர் ஜீவனை வைத்து மீள்தயாரிப்பு செய்திருந்த, இயக்குனர் செல்வா அதன் நீட்சியாக கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் இது.

இந்தியாவின் 5 பெண்களை ஏமாற்றிவிட்டு ‘நான் அவன் இல்லை’ என்று கூறி தமிழ்நாட்டு காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் அலைச்சல் காட்டிவிட்டு தப்பிக்கும் அண்ணாமலை (ஜீவன்) ஐரோப்பிய நாடொண்றில் தஞ்சமடைகிறார். அவருடன் நண்பர் நெப்போலியனும் (மயில்சாமி). பணத்தாசை பிடித்த நடிகை தீபா (லட்சுமிராய்), ஆண்களின் சபலத்தை பயன்படுத்தி பணம் பறிக்கும் ஷகி (ஷ்ருதி பிரகாஸ்), அடிமைபோல கணவனை தேடும் நிஷா (ஸ்வேதா மேனன்) மற்றும் திருட்டுத்தனம் புரியும் மரியா (ரஷானா மயூரா) ஆகியோரை விதம் விதமாக ஏமாற்றி பணம் சேர்க்கிறார்.

ஏமாற்றி சேர்க்கும் பணத்தை இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் மஹாலக்மியின் (சங்கீதா) வைத்திய செலவுக்கும், அவரது மகளை பிரித்து பணம் கேட்பவர்களுக்கும் கொடுத்து தாயையும், மகளையும் ஒன்றுசேர்த்து விட்டு மீண்டும் ‘நான் அவன் இல்லை’ என்று கூறி பாதிரியார் வேடத்தில் தப்பித்து செல்கிறான் அண்ணாமலை. மீண்டும் இந்தியாவில் முருகன் என்கிற பெயரில் அண்ணாமலை தன்னுடைய ஏமாற்று படலத்தை ஆரம்பிப்பதுடன், ‘நான் அவன் இல்லை 2’ முடிகிறது. இதன் தொடர்ச்சிகள் எதிர்காலத்திலும் சாத்தியமே.

‘நான் அவன் இல்லை’ முதல் பாகத்தில் திரைக்கதையின் ஓட்டத்துக்கு பொருந்தியிருந்த நடிகர் ஜீவன், அதன் தொடர்ச்சியை இந்தப் படத்திலும் காட்டியிருக்கிறார். பெண்களை ஏமாற்றும் வாலிபனான அவரது தோற்றமும், உடல்மொழியும் வெகு இயல்பு. ஆனால், எதிர்காலத்திலும் இவ்வாறான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக்கொண்டால் மக்களுக்கு அலுத்துவிடும். இலங்கை பெண் மஹாலக்மியாக வரும் சங்கீதாவுக்கு பெரிய வேலையில்லை. இலங்கை தமிழை (அப்படித்தானே சொல்கிறார்கள் படத்தில்) கொச்சையாக பேசுகிறார். கிடைத்த சந்தப்பங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

லட்சுமிராய், ஷ்ருதி பிரகாஸ், ஸ்வேதா மேனன், மற்றும் ரஷானா மயூரா ஏமாற்றப்படும் பெண்களாக அதிக கவர்ச்சியை காட்டிச் சென்றிருக்கிறார்கள் படம் முழுவதிலும். இவர்களுக்கு நடிக்க சந்தர்ப்பங்கள் பெரிதாக இல்லை. அரைகுறை ஆடைகளுடன் இயக்குனர் கேட்டதை படத்தில் கொடுத்திருக்கிறார்கள். வேறு ஒன்றும் இவர்களை பற்றி கூறுவதற்கில்லை. அதே நெப்போலியன் பாத்திரத்தில் மயில்சாமி சிரிக்க வைக்கிறார். அண்மைக்காலத்தில் அவரை அனேக படங்களில் காணக்கிடைக்கிறது. இவர்கள் தவிர ராஜ்கபூர், பைவ்ஸ்டார் கிருஷ்னா உள்ளிட்ட சிலரும் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் ஓரளவு பலம் ஒளிப்பதிவு. வெளிநாடுகளின் (நடிகைகளினதும்) வனப்பு மிக்க பகுதிகளில் அழகாக படம்பிடித்திருக்கிறார். படத்தில் மிகப்பெரிய ஏரிச்சலை ஏற்படுத்துகிறது டி.இமானின் பாடல்களும், பின்னணி இசையும். இவர், எதிர்காலத்திலாவது பாடல்கள் என்ற போர்வையில் இரைச்சல்களை தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். படத்தின் வசனங்களில் பெரிய ஆச்சரியமில்லை. படத்தொகுப்பு இயக்குனரை திருப்திப்படுத்தியிருக்கிறது.

கே.பாலசந்தரின் ‘நான் அவன் இல்லை’யை அடிநாதமான வைத்து கதையையும், திரைக்கதையும் எழுதியிருக்கும் இயக்குனர் செல்வா, சில இடங்களில் சுவாரஸ்யங்களை வரவழைத்திருந்தாலும், பல இடங்களில் ஏமாற்றங்களையே தந்திருக்கிறார். ஆனாலும், அண்ணாமலை ஏமாற்றுவதற்கு ஒரு காரணத்தைச் சொல்லி நாயகனை நியாயப்படுத்த முனைந்திருக்கிறார்.

Read more...

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP