[HOME.gif][TAMIL+KARAOKE.gif][KARAOKE+VIDEO.gif][TAMIL+REMIX.gif][TAMIL+LYRICS+1.gif][TAMIL+POP.gif][MP3+SONGS.gif]

Vettaikaran

Friday, January 1, 2010



*************************************************************************************

“நேர்மையான பொலிஸ் அதிகாரியாக வர விரும்பும் மாணவன், கால ஓட்டத்தில் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் அழிக்கும் வேட்டைக்காரன் ஆவதே” அறிமுக இயக்குனர் பாபு சிவன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியிருக்கும் ‘வேட்டைக்காரன்’ படத்தின் கதைச் சுருக்கம்.

ஏ.வி.எம் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்தப்படத்தில் அனுஷ்கா, சலீம் கோஸ், ஷியாகி ஷின்டே, சிறிநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை கோபிநாத் கையாண்டுள்ளார். கலை இயக்கத்தை மிலனும், படத்தொகுப்பை வி.ரி.விஜயனும் செய்துள்ளனர்.

தூத்துக்குடியில் நண்பர்களுடன் சுற்றிக்கொண்டும், சமூகத்தில் நடக்கிற தவறுகளை தட்டிக்கேட்டும் வருகிற ரவிக்கு (விஜய்) நேர்மையான பொலிஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று ஆசை. அந்த ஆசைக்கு தூண்டுகோலாய் இருந்தவர் பொலிஸ் அதிகாரி தேவராஜ்.

தூத்துக்குடியிலிருந்து கல்லூரி கல்விக்காக சென்னை வரும் ரவி, வரும் வழியில் சுசிலாவைச் (அனுஷ்கா) சந்திக்கிறார். அதன் பின்னர் ரவிக்கும், சுசிலாவுக்கும் காதல் வரவேண்டும் என்பது இந்தியச் சினிமாவின் எழுதப்படாத விதி. அதுவே வேட்டைக்காரனிலும் தொடர்கிறது.

கல்லூரியில் சேர்ந்து படித்துக்கொண்டு, தன்னுடைய வருமானத்திற்காக ஆட்டோவும் ஓட்டுகிறார் ரவி. இவ்வாறாக கதையின் நீட்சி வில்லன் குழுவின் செல்லாவை சந்திக்க வைக்கிறது. பின்னரான கதை ஓட்டத்தில் ரவி பொலிஸ் ஆனாரா? வில்லன்கள் எவ்வாறு பழிவாங்கப்பட்டார்கள்? ரவி, சுசிலாவை கைப்பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

எத்தனை படத்தில் இதே கதை சொல்லியாகிவிட்டது என்ற உங்களின் ஏக்கம் புரிகிறது. என்ன செய்ய நாங்கள் பார்ப்பது இந்தியச் சினிமா. பருத்திவீரன், பா, சக்தே இந்தியா, மொழி போன்ற வித்தியாச கதைக்களங்களைக் கொண்ட படங்கள் எப்போதாவது ஒருமுறைதான் வரும். நாங்களும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கல்லூரி மாணவராக வரும் விஜய் படம் முழுவதிலும் வில்லன்களைப் பந்தாடுகிறார். அனுஷ்காவுடன் நடனமாடுகிறார். ஆங்காங்கே தன்னுடைய அரசியல் ஆசையை வசனங்களின் மூலம் வெளிக்காட்டுகிறார். என்ன வயது ஆனாலும், பதின்ம வயதை தாண்டிய தோற்றத்திலேயே இருக்கிறார். மற்றப்படி விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.

‘இரண்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அனுஷ்கா சிறிய இடைவெளிக்கு பின்னர் வேட்டைக்காரனில் மீள் அறிமுகமாகியிருக்கிறார். இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் வழமைக்கு மாறாக சற்று உயரமான கதாநாயகி.

‘தேவநாயகம்’ என்கிற பெயரில் தொழில் அதிபர், தாதா இன்னும் பிற.....வாக வரும் சலீம் கோஸ் நல்ல பொருத்தம். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ் திரையுலகில் அவரை காண முடிகிறது. ஷியாகி ஷின்டே, சிறிநாத், சத்யன், டெல்லி கணேஸ் என்று படத்தில் அனேக நடிகர்கள். இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார்கள்.

வேட்டைக்காரனின் பலங்களில் ஒளிப்பதிவையும், கலை இயக்கத்தையும் குறிப்பிட்டு சொல்லலாம். பாடல் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் ஒளிப்பதிவின் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார் கோபிநாத். ‘பில்லா’ படத்தில் கலை இயக்கத்தில் ஆடம்பரம் காட்டிய மிலன் இந்தப் படத்திலும் தன்னை நிரூபிக்க முயன்றுள்ளார்.

சண்டைக்காட்சிகள் குருவி, ஆதவன் என்று ஏற்கனவே எம்மை எரிச்சலூட்சிய யதார்த்த மீறல்கள் கொண்ட காட்சிகளின் தொடர்ச்சியே வேட்டைக்காரனிலும். படத்தின் பலமுமு;, பலவீனமும் விஜய் ஆண்டனி. பாடல்களில் சில ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதால் இரசிகர்களை திரையரங்குக்கு அழைத்துவர உதவும். ஆனால், பின்னணி இசை சொல்லும்படியில்லை.

இயக்குனர் தரணி படங்களில் இணை இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய பாபு சிவனை இரசிகர்கள் வெற்றி இயக்குனராக்குவது கேள்விக்குறியே. வேட்டைக்காரனின் கதை, திரைக்கதை ஏற்கனவே பழக்கப்பட்டது. வசனங்களில் வசனகர்த்தா பாபு சிவனை காண முடிகிறது.

குருவி, வில்லு என்று தொடர்ச்சியான சரிவுகளில் இருக்கும் விஜய்க்கு ‘வேட்டைக்காரன்’ அதே வலியை தரமாட்டான் என்று நம்பலாம். அதற்கு சன் பிக்ஸர்சின் விளம்பர உத்தி உதவக்கூடும். ஆனாலும், தமிழ் சினிமாவின் வசூல் ராஜாவாக வலம் வந்த விஜய்க்கு வேட்டைக்காரனும் பெரிதாக கைகொடுக்கவில்லை.

0 comments:

Post a Comment

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP